Saturday, August 9, 2025

கேப்டன் பிரபாகரன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு**“நன்றி, மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில்

*கேப்டன் பிரபாகரன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு*
*“நன்றி, மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் நெகிழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர்*
*“அகில இந்திய சினிமா உற்றுப்பார்த்த சில திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன் படமும் ஒன்று” ; அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பெருமிதம்*

*“கேப்டன் பிரபாகரன் படத்தை எடுத்து என்னை சிக்கலில் மட்டிவிட்டவர் ஆர்.கே.செல்வமணி” ; இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்ட புது தகவல்*

*“இனி ஒவ்வொரு வருடமும் கேப்டனின் படங்கள் ரீ ரிலீஸ் பண்ணப்படும்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் விஜய பிரபாகரன் கொடுத்த வாக்குறுதி*

*“நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியங்களை தனது வாரிசுகளுக்காக சேர்த்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் கேப்டன்” ; நெகிழ்ந்த ஆர்.கே.செல்வமணி*

*“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” ; கண்கலங்கிய  ஆர்.கே.செல்வமணி*

*“கேப்டன் பிரபாகரன் படப்பிடிப்பில் எனக்கும் சரத்குமாருக்கும் தண்டால் எடுப்பதில் போட்டி நடக்கும்” ; மன்சூர் அலிகான் கலாட்டா பேச்சு*

*“கேப்டன் பிரபாகரன் எனக்கு கொடுத்த வெற்றியால் அடுத்த பத்து வருடத்திற்கு  எனக்கு வாய்ப்புகள் குவிந்தன” ; ரம்யா கிருஷ்ணன் ஓபன் டாக்*
  

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது  இந்த படம். 

‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்

இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான், மன்சூர் அலிகான், நாயகி ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், ஏ.ஆர் முருகதாஸ், பேரரசு, எழில், லிங்குசாமி தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, அம்மா கிரியேஷன்ஸ் T சிவா, தனஞ்செயன், லலித்குமார் நடிகர்கள் ரவிமரியா, சிங்கம்புலி, உதயா, இளவரசு உள்ளிட்ட பலர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர்  பேசும்போது,

“எனக்கு அரசியல் மீது, சமுதாயத்தின் மீது இருக்கும் கோபங்களை எல்லாம் கொட்ட வேண்டும்.. அதை திரைப்படத்தின் மூலம் தான் கொட்ட வேண்டும்.. அப்படி எனக்கு கிடைத்து பவர்ஃபுல் ஹீரோ தான் விஜயகாந்த்.. வேறு எந்த ஹீரோவையும் நான் தேடி போகவில்லை.. ஒரு காலகட்டத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் பயங்கர வெற்றிகளை கொடுத்தார்கள். ஆனால் பெரிய செலவு வைக்கிறார்கள் என்று தயாரிப்பாளர்கள் பயந்து விட்டார்கள். திரைப்பட கல்லூரியில் படித்தவர்களில தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்தவர்கள் என்றால் ஆர்கே செல்வமணி, ஆர்.வி உதயகுமார் இருவரையும் குறிப்பிட்டு சொல்லலாம். கேப்டன் பிரபாகரன் படம் வெளியான பொழுது எப்படி ஓடியதோ அதே போல இப்போதும் வெற்றிகரமாக ஓடும், விஜயகாந்த் மற்ற இயக்குனர்களை எல்லாம் பெயர் சொல்லிக் கூப்பிடுவார். என்னை மட்டும் டைரக்டர் சார் என்று சொல்வார். இதுதான் மரியாதை, நன்றி.. நன்றி என்றால் விஜயகாந்த் என்று அர்த்தம். மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்.

சட்டம் ஒரு இருட்டறை படத்தில் எப்படி என்னிடம் நடந்து கொண்டாரோ அதன்பிறகு அவருடன் 18 வது படம் பெரியண்ணா இயக்கியபோதும் அதே போல தான் என்னிடம் மரியாதை வைத்திருந்தார். என்னுடைய மகன் விஜய்யின் முதல் படம் நாளைய தீர்ப்பு. 70 லட்சம் செலவு செய்து எடுத்து சரியாக போகவில்லை. ஆனால் நடிகராக வந்து விட்டார்.. அவரை எப்படியாவது நான் வளர்த்து விட வேண்டும் அதற்காக ஒரு பெரிய நடிகருடன் அவரை நடிக்க வைக்க விரும்பினேன். எந்த பெரிய நடிகரும் ஒத்துக் கொள்ளவில்லை அப்போது விஜயகாந்திடம் சென்று, விஜயகாந்த் தம்பியாக விஜய் நடிக்கும் விதமாக ஒரு கதை இருக்கிறது அப்படி நடித்தால் விஜய்க்கு அது உதவியாக இருக்கும் என்று கேட்டேன். உடனே எப்போது கால்சீட் வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். இவரை வைத்து நான் இயக்கிய 18 படங்களிலும் நான் தான் அவருக்கு டேட் சொல்லி இருக்கிறேன். செந்தூர பாண்டியில் அவரை வைத்து 17 நாள் சூட்டிங் நடந்தது. செந்தூரப்பாண்டி முடித்ததும் வியாபாரம் சூப்பராக நடந்தது. மிகப்பெரிய லாபம் வந்தது. ஆனால் ஒரு பைசா கூட பணம் வாங்க மறுத்து விட்டா.ர் அப்போது அவர் வீட்டு அருகில் இருந்த என்னுடைய காலி இடத்தை அவர்கள் பெயருக்கு மாற்றி பத்திரம் பதிவு செய்து அவரிடம் சென்று கொடுத்தேன். ஆனால் அப்போதும் கூட என்னிடம் கோபப்பட்டார். 

எங்கள் இருவருக்கும் நட்பு என்பதையும் தாண்டி வேறு உறவு. அவர் மனதில் எனக்கு தனி இடம் இருந்தது. போகும்போது தனுடைய அடையாளத்தை விட்டுட்டு செல்பவன் தான் சிறந்த மனிதன். அப்படி விஜயகாந்த் இந்த பூமியில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த படம் வெளியான பிறகு ஆர்கே செல்வமணியை தேடி நிச்சயமாக தயாரிப்பாளர்கள் வருவார்கள்” என்று கூறினார். 

இயக்குனர் விக்ரமன் பேசும்போது, 

கேப்டன் பிரபாகரன் ரிலீஸ் ஆன அந்த காலகட்டம் எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த படம் வெளியான சமயத்தில் தான் ராஜீவ் காந்தி படுகொலை நடந்தது. அப்போது விஜயகாந்த் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர் என்பதால் இந்த படம் சரிவை சந்திக்கும் என்று சொன்னார்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி வெற்றி கண்டது. 35 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே பிரமாண்டம் இப்போதும் இருக்கிறது. இந்த படத்தின் பாடல்களை பார்க்கும்போது எனக்கு கண்களில் கண்ணீர் வந்துவிடும். கேப்டன் பிரபாகரன் படத்தில் 25 நிமிடம் கழித்து தான் அவர் மாஸாக என்ட்ரி கொடுப்பார் அந்த போலீஸ் ஸ்டேஷன் பைட் போல தமிழ் சினிமாவில் இன்னொரு சண்டைக்காட்சியை யாராலும் பண்ண முடியாது. ஏனென்றால் அவருடன் இணைந்து இரண்டு படங்களில் பணியாற்றி இருப்பவன் என்பதால் சொல்கிறேன். அவரைப் போலவே அவரது மகன்கள் சண்முக பாண்டியன் சினிமாவிலும் விஜயபிரபாகரன் அரசியலிலும் மிகப்பெரிய வெற்றியை பெறுவார்கள் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா பேசும்போது,

“அகில இந்திய சினிமா உற்றுப்பார்த்த சில திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன் படமும் ஒன்று. கேப்டன் என்கிற அடைமொழியை விஜயகாந்துக்கு தந்தது. இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தை அந்த காலத்தில் யாரும் எடுக்க முடியாத பட்ஜெட்டில் எடுத்தார் இப்ராஹிம் ராவுத்தர். சோலே படத்தின் பத்து சதவீத பட்ஜெட்டில் தமிழில் ஒரு சோலை போல எடுத்தார் ஆர்கே செல்வமணி. இந்த படத்தில் ஆர்கே செல்வமணியுடன் தோளுக்கு தோள் நின்றது லியாகத் அலிகானின் வசனங்கள். மன்சூர் அலிகானை உருவாக்கிய படம் இது. கேப்டன் ரத்தம் சொட்ட சொட்ட நடித்த படம் இது. கேப்டன் பிரபாகரன் காலத்தை வென்ற படம் தான். ரீ ரிலீஸில் இந்த படம் தான் பெஸ்ட் என்கிற சாதனையை கேப்டன் பிரபாகரன் படைக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறினார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசும்போது,

“மனித நேயத்திற்கு ஒரு உத்தரவாதம் என்றால் அது விஜயகாந்த் தான். அவரோடு நான் கூலிக்காரன், நல்லவன். புதுப்பாடகன் படங்களில் பணியாற்றி இருக்கிறேன். கடையேழு வள்ளல்களைப் பற்றி படித்திருக்கிறோம். நாம் பார்த்ததில்லை. நம் கண் முன்னே வாழ்ந்த எட்டாவது வள்ளல் என்றால் விஜயகாந்தை சொல்லலாம். 24 மணி நேரமும் அவருடைய ராஜா பாதர் தெருவில் உள்ள அலுவலகத்தில் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும். கேப்டன் பிரபாகரன் வெளியான சமயத்தில் வட இந்திய தயாரிப்பாளர்கள் எல்லாம் செல்வமணியை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.  புரட்சி கலைஞர் என்கிற அடைமொழியை கேப்டனுக்கு கொடுத்ததில் நான் பெருமையடைகிறேன். திரையுலகில் எந்த ஒரு பிரச்சனைக்காகவும் அவர் முன் நின்று பணியாற்றியவர். நடிகர் சங்கத்தை மீட்டெடுத்து அதன் கடனை அடைத்தவர். அவருடைய செல்வங்கள் இருவரும் கலை உலகிலும் அரசியலியலும் பெரிய உயரத்தை அடையவேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று பேசினார்

இயக்குநர் ஆர்,வி.உதயகுமார் பேசும்போது,

“35 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படி இருக்கிறது இந்த மேடை. இனிமேல் சினிமா இப்படியே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். விஜயகாந்த்திற்கு ரொம்ப ரொம்ப கடமைப்பட்டவர்கள் திரைப்படக் கல்லூரி மாணவர்கள். அவரைப்போல அவரை அதிகமான இயக்குனர்களை உருவாக்கியவர்கள் வேறு எந்த நடிகரும் இல்லை. அந்த வகையில் இயக்குனர்களின் தெய்வமாக அவர் தெரிகிறார். அதில் முதன்மையானவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி. விஜயகாந்த் அவருக்கு கொடுத்த இரண்டு வாய்ப்புகளையும் அற்புதமாக பயன்படுத்தி ராவுத்தர் ஃபிலிம்ஸின் பெயரை உச்சத்துக்கு கொண்டு போனதில் செல்வமணியின் கடின உழைப்பு இருக்கிறது. ரம்யா கிருஷ்ணனை இந்த விழாவில் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

இந்த படத்திற்கு எத்தனையோ சாதனைகள் உண்டு. இந்த சாதனைகளை படைத்த ஆர்.கே செல்வமணி அவர்களுக்கு நன்றி. இசைஞானி இளையராஜா இன்றைக்கும் காலத்தால் அழியாத ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடலை கொடுத்தார். நான் கேப்டனுடன் இணைந்து படம் பண்ணுவதற்கு முன்பு ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன் என திரைப்பட கல்லூரி மாணவர்கள் பிரம்மாண்டமாக படம் எடுத்து விட்டனர். என்னையும் அவர் அப்படித்தான் நினைத்தார் போல. ஆனால் நான் ஒரு எமோஷனல் கிராண்டியராக படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். அப்படி அந்த படத்தில் இடம்பெற்ற வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே பாடல் வேறு யாருக்கும் இன்று வரை பொருந்தாது. அடுத்தவங்க வந்து என்ன எதிர்பார்க்கிறார் என்று கேட்காமல் தெரிஞ்சு உதவி செய்யக்கூடிய ஒரே மாமனிதர் கேப்டன் தான். இந்த கேப்டன் பிரபாகரன் படம் இதை தைரியமாக எடுத்து வெளியிடும் எனது அன்பு தம்பி கார்த்திக் அவர்களுக்கும் அவருடைய பார்ட்னருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நிச்சயமாக இந்த படம் மீண்டும்   மிகப்பெரிய வெற்றி பெறும். இதை தொடர்ந்து இயக்குநர் செல்வமணி பெப்சி வேலைகளை விட்டுவிட்டு புதிதாக படங்களை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று பேசினார்.

நடிகர் இளவரசு பேசும்போது,

மதுரையில் நான் டுடோரியல் படித்த காலத்திலேயே கேப்டனும் ராவுத்தரும் இணை பிரியாத நண்பர்களாக கெத்தாக வலம் வருவார்கள். அப்போது இருந்தே அவர்களை பார்த்திருக்கிறேன் .விஜயகாந்த்திற்கு வசனம் எழுதுவதற்கென்றே பிறப்பு எடுத்தவர் தான் லியாகத் அலிகான். விஜயகாந்த் செய்த புண்ணியத்துக்கு அவரது வாரிசுகள் எல்லாம் ஜெயித்தே ஆக வேண்டும்” என்று பேசினார்.

வசனகர்த்தாவும் இயக்குநருமான லியாகத் அலிகான் பேசும்போது, 

“ஆர்,கெ.செல்வமணி இந்த சங்கங்களின் வேலைகளில் ஈடுபடாமல் இருந்தால் இன்னும் மிகப்பெரிய உயரத்துக்கு போயிருப்பார். பலரது நெஞ்சங்களில் கோயிலாக இருந்த கேப்டன் இன்று கோயம்பேட்டில் கோயிலாகவே மாறிவிட்டார். தொண்டர்களும் மக்களும் பக்தர்கள் ஆகிவிட்டார்கள். எம்ஜிஆர் பாடிய கொடுத்ததெல்லாம் கொடுத்தான் பாடல் நூறு சதவீதம் விஜயகாந்த்திற்கு தான் பொருந்தும். செல்வமணிக்காக வசனங்கள் எழுதும் வாய்ப்பை எனக்கு கொடுத்தவர் விஜயகாந்த் தான். கேப்டன் பிரபாகரன் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டபோது கிளைமாக்ஸ் கோர்ட் காட்சிகளை தூக்கி விடலாம் என்று சொன்னார்கள். ஆனால் நாங்கள் மறுத்து விட்டோம். ஆனால் படம் வெளியான பிறகு விஜயகாந்த் பேசப்பேச தெலுங்கு ரசிகர்களின் கைதட்டல் பயங்கரமாக இருந்தது என்று அவர்களே சொன்னார்கள். இந்த படத்தை இன்றைய இளைஞர்கள் பார்க்கும்போது ஏன் இப்போது இது போன்ற படங்களை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். செல்வமணியின் புகழ் பேசப்படும். அரசியலில் எந்த கூட்டணி ஜெயிக்கும் என்று சொல்ல முடியாது ஆனால் செல்வமணி லியாகத் அலிகான் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இப்போது தேமுதிக மத்தியில் ஒரு எழுச்சி தெரிகிறது. அதை புரட்சியாக மாற்றுவது விஜய பிரபாகரனின் கடமை” என்று பேசினார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசும்போது, 

“தமிழில் நடிக்க ஆரம்பித்து பெரிய வெற்றி இல்லாத சமயத்தில் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் தான் எனக்கு கேப்டன் பிரபாகரன் வாய்ப்பு வந்தது. அதில் இரண்டாவது கதாநாயகி தான். ஆனால் அந்த படம் எனக்கு கொடுத்த வெற்றி அடுத்த பத்து வருடத்திற்கு  எனக்கு வாய்ப்புகளை தேடி வந்து கொடுத்தது. இப்போ வரைக்கும் அந்த ஆட்டமா தேரோட்டமா என்கிற பாடல் ரசிகர்களின் ஃபேவரிட் பாடலாக இருக்கிறது. இன்று விஜயகாந்த் இருந்திருந்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும். இந்த படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் இரண்டு மடங்கு வெற்றி பெறும் என அவர் மேலே இருந்து வாழ்த்துவார் என நம்புகிறேன்” என்று பேசினார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசும்போது,

“இந்திய சினிமாவில் 2025ல் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன இந்தியாவே கொண்டாடும் ஷோலே படத்தின் ஐம்பதாவது ஆண்டில் அந்த படம் ரீ ரிலீஸ் ஆகிறது. அதேபோல தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் வெளியாகிய 35 வது வருடத்தில் அந்த படம் ரீ ரிலீஸ் ஆகிறது. இரண்டு பாடல்களுக்காகவே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்படும். செல்வமணியை மாபெரும் சிக்கலில் விட்ட படம் தான் கேப்டன் பிரபாகரன். காரணம் இந்த படம் அவரை அவ்வளவு உச்சத்தில் கொண்டு போய் வைத்து விட்டது. இயக்குனர் ரமேஷ் சிப்பிக்கும் இந்த நிலை தான் ஏற்பட்டது. மன்சூர் அலிகான் இன்றும்போல அதே யூத் ஃபுல்லாக இருக்கிறார். ஷோலே படத்தில் வில்லனாக நடித்த அம்ஜத் கான் எப்படி இன்றுவரை சிறந்த வில்லனாக கொண்டாடப்படுகிறாரோ, அதேபோல கேப்டன் பிரபாகரன் மூலம் வில்லனாக அறிமுகமான மன்சூர் அலிகானும் கொண்டாடப்படுகிறார். படம் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்று விஜயகாந்தின் புகழை இன்னும் காலகாலமாக பறைசாற்றும் என்பதில் சந்தேகமில்லை” என்று பேசினார்.

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது, 

“கள்ளக்குறிச்சியில் இந்த படம் வெளியானபோது கிட்டத்தட்ட பத்து நாட்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த படத்தில் இரண்டு பாடல்கள்தான். அதுவும் ஹீரோவுக்கு கிடையாது. துப்பாக்கி படத்தின் முதல் 20 நிமிட காட்சிகளை கேப்டன் பிரபாகரனை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்துத்தான் எடுத்தேன். பெரும்பாலும் வில்லன் இறந்து விட்ட பிறகு ஒரு படம் முடிந்து விடும். ஆனால் இதில் வில்லன் இறந்த பிறகும் பத்து நிமிடம் படம் ஓடியது. அதை முன்னுதாரணமாக வைத்து தான் ரமணா படத்திலும் ஹீரோ இறந்த பிறகு கொஞ்ச நிமிடங்கள் படம் ஓடும்படி உருவாக்கினேன். கேப்டனை வைத்து படம் இயக்குவது ஒரு கனவாக இருந்தது. என்னுடைய திருமணத்தை அவர் நடத்தி வைத்ததும் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு ஆங்கில படம் போல அன்றைய காலகட்டத்திலேயே அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டத்தை இயக்குனர் ஆர்கே செல்வமணி கொடுத்திருக்கிறார். அவரது அருகில் நான் அமர்ந்திருக்கிறேன் என்பதே பெருமை” என்று பேசினார்.

இயக்குனர் லிங்குசாமி பேசும்போது, 

“நான் ரஜினி சார் ரசிகன். என்னுடைய அண்ணா விஜயகாந்த் ரசிகர். இந்த படத்தில் 30 நிமிடம் கழித்து தான் விஜயகாந்த் என்ட்ரி அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற போலீஸ் ஸ்டேஷன் சண்டைக்காட்சி தான் என்னுடைய ரன் படத்தின் சப்வே சண்டை காட்சிக்கு உந்துதலாக இருந்தது. பிரம்மாண்டமான ஆக்சன் படங்களில் நான் பார்த்து பிரமித்து ஸ்க்ரிப்ட் என்றால் அது கேப்டன் பிரபாகரன் தான். புஷ்பா படத்தை பார்க்கும்போது கேப்டன் பிரபாகரனின் இன்ஸ்பிரேஷன் அதில் நிறையவே தெரிகிறது. படத்தில் மட்டுமல்ல உழைப்பில், நேர்மையில், குணாதிசயத்தில் கூட ஆர்,கே செல்வமணி பிரம்மாண்டமானவர். விஜயகாந்தின் வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு மிக முக்கியமான படம் என்றால் கேப்டன் பிரபாகரனுக்கு முன்பு கேப்டன் பிரபாகரனுக்கு பின்பு என்று சொல்லும் விதமாக இதை இயக்குனர் செல்வமணி கொடுத்திருந்தார்” என்று பேசினார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“ரம்யா கிருஷ்ணன் படத்தில் ரிலீசின் போது பார்த்ததை விட இப்போது இன்னும் இளமையாக இருக்கிறார். ஒருவேளை எனக்கு வயதாகிறதோ என்னவோ ? எத்தனையோ படங்கள் நடித்தாலும் இந்தப் படம் தான் மன்சூர் அலிகான் பேர் சொல்லும் படம். இந்த படத்தின் மூலம் கேப்டனும் கிடைத்தார். பிரபாகரனும் கிடைத்தார். மீண்டும் செல்வமணியை ஒரு இயக்குனராக பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு இருக்கிறது. ஆர்கே செல்வமணி என்றால் ஆளுமை. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வளரும் காலகட்டத்தில் புது இயக்குனர்களுக்கு படம் கொடுப்பார்கள். ஆனால் வளர்ந்த பிறகு வெற்றி பெற்ற இயக்குனர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்பார்கள். விஜயகாந்த் மட்டும் 150 படங்களில் 150வது படத்தில் கூட புதிய இயக்குநரை அறிமுகப்படுத்தினார். நமது வெற்றி நமக்கு பயன் தருவதை விட ஒருவரை உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர் தான் விஜயகாந்த். அவரை வைத்து படம் இயக்கிய இயக்குனர்கள் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அவரை சென்று சந்திக்கலாம்.. தடை இருக்காது.. இந்த காலகட்டத்தில் தமிழில் இது போன்ற படங்களை எடுக்க முடியுமா என்று நினைத்த காலத்தில் இப்படி ஒரு படத்தை கேப்டனும் செல்வமணியும் இணைந்து கொடுத்தார்கள். இந்த படத்தின் ரீ ரிலீஸை தொடர்ந்து செல்வமணியின் புதிய இன்னிங்ஸ் ஆரம்பிக்கும். கேப்டனின் கலை உலக வாரிசாக சண்முக பாண்டியனும் அரசியல் வாரிசாக விஜய பிரபாகரனும் அவரைப் போலவே வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குனர் எழில் பேசும்போது,

“இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது புஷ்பா டிரைலர் போல இருந்தது. 35 வருடம் கழித்து இந்த படம் வெளியாகிறது என்றால் அதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு தான் இந்த படத்தின் வெற்றி. கேப்டனின் படங்களில் காலம் கடந்து நிற்கும் பல படங்களில் முக்கியமான படம் இந்த கேப்டன் பிரபாகரன். விரைவில் ஆர்.கே.செல்வமணி மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று பேசினார்.

நடிகர் சிங்கம் புலி பேசும்போது,

“கேப்டன் பிரபாகரன் படத்தின் படப்பிடிப்பு பெரியகுளம் கும்பக்கரை அருவியில் நடந்த போது மலைப்பகுதியில் இருந்து அந்த படத்தின் படப்பிடிப்பை ஓடி ஓடி பார்த்தேன். கேப்டன் போட்ட சாப்பாடு தான் என்னை சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல விடாமல் இங்கேயே தங்க செய்து இயக்குநராக மாற்றியது. ஒரு முறை கேப்டனை பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். என்னை அழைத்து யார் என்று கேட்டபோது சுந்தர் சியின் உதவி இயக்குனர் என்றேன். நீயும் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ளவில்லையா என்று கேட்டார்.. சார் உங்களை வைத்து நான் படமே  வேண்டும் என்று கேட்டேன். அப்போது ஆச்சரியமாக பார்த்துவிட்டு போய்விட்டார். ஆனால் மாயாவி படத்தில் அவரை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து எனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்” என்று கூறினார்.

நடிகர் ரவிமரியா பேசும்போது,

“எனுடைய 28 வருட திரையுலக வாழ்க்கையில் 20 வருடங்களை இயக்குனர் ஆர்.கே செல்வமணிவுடன் தான் கழித்துள்ளேன். 28 வயதிலேயே ஹாலிவுட் ரேஞ்சுக்கு ஒரு படம் பண்ணியிருக்கிறார் என்றால் இன்றைய இயக்குனர்களுக்கு உண்மையிலேயே அது சவால் விடும் விஷயம். இன்று நாம் பார்த்து வியக்கின்ற இயக்குனர்களை விட எல்லாம் 35 வருடங்களுக்கு முன்பே ஒரு மிகப்பெரிய முத்திரையை பதித்தவர் ஆர்.கே செல்வமணி. கேப்டன் விஜயகாந்த் மனிதராகப் பிறந்து மனித தெய்வம் ஆனவர். இது புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு பிறகு கேப்டன் மட்டுமே” என்று கூறினார்

நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது,

“புரட்சி கலைஞரின் நூறாவது படத்தில் நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். நான் இந்த படத்தில் நடிக்கும் போது நிஜமான வீரப்பனின் முகம் எப்படி இருக்கும் என்று வெளி உலகத்திற்கு தெரியாது. சாலக்குடி படப்பிடிப்புக்காக சென்றபோது அங்கே செல்வதற்காக ராவுத்தர் தனி பாதையே போட்டு கொடுத்தார். அப்போது ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை சரண்யா தான்.. ஆனால் இந்த காட்டுப் பகுதிக்குள் வந்து யானை, பாம்பு என வன மிருகங்களை பார்த்ததும் இந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டாராம். இயக்குனர் ஆர்.கே செல்வமணி லொக்கேஷன்களை கண்டுபிடிப்பதற்காக நடந்து கொண்டே இருப்பார். படப்பிடிப்பில் எனக்கும் சரத்குமாருக்கும் தண்டால் எடுப்பதில் போட்டி நடக்கும். காலையிலிருந்து வசனமே இல்லாமல் என்னுடைய காட்சிகளை எடுப்பார்கள். மாலை ஐந்து மணிக்கு தான் சென்னையில் இருந்து டயலாக் பேப்பர் விமானம் மூலமாக, கார் மூலமாக வரும், அதற்குப் பிறகு பக்கம் பக்கமாக பேச வைத்து எடுப்பார்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மறக்க முடியாதது. அதை படமாக்கிக் கொண்டிருந்த கடைசி நாளில் தான் தம்பி விஜய பிரபாகரன் பிறந்தார். அதேபோல படத்திலும் சென்டிமென்டாக ரம்யா கிருஷ்ணனுக்கு குழந்தை பிறப்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டது. அந்த வகையில் இந்த படத்தில் நடித்த நாட்கள் அனைத்துமே மறக்க முடியாதவை” என்று கூறினார்.

இயக்குனர் ஆர்.கே செல்வமணி பேசும்போது,

“என்னை நம்பி என் அப்பா அம்மாவே பணம் கொடுக்க யோசித்த சமயத்தில் விஜயகாந்த்தும் ராவுத்தரும் ஒரு கோடி ரூபாய் போட்டு என்னை நம்பி படம் எடுத்தார்கள். திரைப்படத் துறையில் என்னுடைய பெற்றோர்கள் என்றால் இவர்கள் இருவரும் தான். புலன் விசாரணை சமயத்தில் தான் அவரது திருமணம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் நான் அவருக்காக கொண்டு சென்ற கிப்ட் கீழே விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சித்த போது, அதை விடுப்பா நீ தான் எனக்கு மிகப்பெரிய கிஃப்ட் என்று என்னை கட்டி அணைத்தார் கேப்டன். அன்று முதன் முதலில் ஈழத் தமிழர்களுக்காக தமிழ் சினிமாவில் இருந்து குரல் கொடுத்த முதல் மனிதர் விஜயகாந்த் தான். அப்போதுதான் இந்த படத்திற்கு பிரபாகரன் என பெயர் வைக்க முடிவு செய்தோம். அது கூட சேர்த்து தளபதி பிரபாகரன் என வைக்கலாம் என்று சொன்னேன் ஆனால் அது சரி வராது என்று என்றபோது தான் திடீரென கேப்டன் பிரபாகரன் என டைட்டில் தோன்றியது. உடனடியாக அதை வைக்க ஒப்புக்கொண்டார் விஜயகாந்த்.

இந்த படத்தின் சம்ண்டை காட்சியில் கயிறு கட்டிக்கொண்டு ஒரு கையில் துப்பாக்கியுடன் அவர் நடித்த போது திடீரென கயிறு அறுந்து விட்டது. கடவுள் அருளால் அருகில் இருந்த பாறையில் விழுகாமல் பக்கத்திலிருந்து புதரில் விழுந்து உயிர் கிடைத்தார் விஜயகாந்த். அடிபட்ட வலியை மறைத்துக் கொண்டு இதை ஸ்டண்ட் மாஸ்டரிதம சொன்னால் அதன் பிறகு எனக்கு சரியாக ஷாட் வைக்க மாட்டார்கள் என அதை சொல்லாமல் மறைத்தவர் விஜயகாந்த். இப்படி தனது வலியை கூட மறைத்துக் கொண்டு அந்த படம் நன்றாக வர வேண்டும் என உழைப்பவர்தான் விஜயகாந்த்.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக சரண்யா தான் நடிக்க இருந்தார். ஆனால் அந்த மலை கிராம பெண்ணுக்கான உடையை அணிவதிலும் இன்னும் சில பிரச்சினைகள் இருந்ததால் அவர் இதிலிருந்து விலகிக் கொண்டார். எங்களுடன் 90 நாட்கள் பயணிக்க ஒரு பெண் வேண்டும், அது சாதாரண நடிகையாக இருக்கட்டும், அல்லது புதுமுகமாக கூட இருக்கட்டும் என்று நினைத்து தேடியபோது தான் ரம்யா கிருஷ்ணன் வந்தார்.. ஆனால் அவர் இந்த படத்தில் நடித்து 35 வருடங்கள் கழித்தும் கூட அந்த ஆட்டமா பாடலை பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. நான் உதவி இயக்குனராக இருந்தபோது அவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். முதன்முதலாக நான் கிளாப் அடித்ததே ரம்யா கிருஷ்ணன் நடித்த காட்சிக்குத்தான். இந்த விழாவிற்கு என் மனைவி ரோஜா மூலமாக அவருக்கு அழைப்பு விடுத்தேன். மறக்காமல் வந்துவிட்டார்.

இந்த படத்தில் சரத்குமார் நடித்தபோது அவருக்கு கழுத்தில் அடிபட்டுவிட்டது. நான்கு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்றது. அதனால் அவரை மாற்றி விடலாமா என்று நினைத்தபோது, விஜயகாந்த் அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். இரண்டாவது படமாக சரத் இதில் நடிக்கிறார்.. வளர்ந்து வரக்கூடிய நடிகர்.. அவரை நீக்கி விட்டால் அவருடைய திரையுலக வாழ்க்கையை பாதிக்கும்.. அவர் திரும்பி வந்த பிறகு நாம் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என பெருந்தன்மையாக கூறினார். இப்படி சில விஷயங்களால் படம் தள்ளித்தள்ளி போனதால் தான் இது 100வது படமாக வரும் பெருமையையும் பெற்றது.

இப்போதைய சூழலில் உலக அழகி போன்ற கதாநாயகி, மிகப்பெரிய கேமராமேன், ஹாலிவுட் இருந்து மேக்கப் மேன் 100 கோடியை தொடக்கூடிய பிரம்மாண்டமான கதை என்று தான் பல பேர் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் விஜயகாந்த் கதையை மட்டுமே நம்பி வருவார், விஜயகாந்த் சாரை பொருத்தவரைக்கும் அரசியலில் நடிக்க தெரியாது. நிஜத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். அதனாலேயே சில பேரின் கிண்டல்களுக்கு ஆளானார். மற்றவர்கள் உள் வாழ்க்கை, வெளி வாழ்க்கை என இரண்டு விதமாக இருப்பார்கள். ஆனால் கேபடனுக்கு அகமும் புறமும் ஒன்றே. நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியங்களை தனது வாரிசுகளுக்காக சேர்த்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்” என்று கூறினார்.
 

விஜய பிரபாகரன் பேசும்போது,

தமிழ் சினிமாவின் ஒரு எவர்கிரீன் படம் தான் கேப்டன் பிரபாகரன். இது கேப்டனின் 100வது படம் என்றாலும் கூட அவர் மறைந்து அதன் பின் ரிலீஸ் ஆவதால் இதை அவரது முதல் படம் போல நாம் கொண்டாட வேண்டும். கேப்டன் நடித்த 156 படங்களில் இனி ஒவ்வொரு வருடமும் அவர் நடித்த படங்கள் இப்போதைய இளைஞர்களுக்காக ரீ ரிலீஸ் செய்யப்படும். இன்றைய திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு கூட அது ஒரு பாடமாக அமையும். கேப்டனும் ராவுத்தர் வாப்பாவும் இணைந்த பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. நான் குழந்தையாக இருந்தபோது படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும் நடந்த சம்பவங்களை எங்களிடம் தவறாமல் பகிர்ந்து கொள்வார்.. இன்று அவரைப் பற்றி அவருக்கு நெருக்கமான, அவருடன் பணியாற்றியவர்கள் தங்கள் அனுபவங்களை பற்றி இங்கு பேசியதெல்லாம் நான் ஏகனவே கேட்டது தான். அந்தவகையில் எனக்கு ஒரு டைம் ட்ராவல் பண்ணியது போன்ற உணர்வு இந்த விழாவில் கிடைத்தது” என்று பேசினார்.

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார் !!*

*நடிகர் விக்ரம் பிரபு &  LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) பட ஃபர்ஸ்ட் லுக்கை,  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டா...